Pages

Wednesday, January 22, 2014

சிறகு விரிந்தது- என் முதல் புத்தக வெளியீடு..

"சிறகு விரிந்தது" 

என் முதல் புத்தகத்தின் தலைப்பு மட்டுமல்ல, தொடரும் பயணத்திற்கான ஆயத்தமும்தான். இது என்னுடைய கவிதைகளின் முதல் தொகுப்பு.

வெகு காலமாகக் காத்திருக்க வைக்காமல் இறுதியில் அந்த நொடி வந்தே விட்டது. ஆமாம்.. நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவில் எனது புத்தக வெளியீடும் அமைதியாக இனிதே நடந்தது.

வாசித்தலென்பது ஒரு சுகானுபவம்.. மழையில் நனைவதைப்போல. அது எழுத்துகளாகவும் இருக்கலாம், வாழ்வியலாகவும் இருக்கலாம், சக மனிதர்களாகவும் இருக்கலாம். அவ்வாறு வாசிக்கப்பட்டவற்றில் சில கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டாலும் சில துளிகள் மட்டும் எப்படியோ விதையாய் விழுந்து முளைத்து வேரோடி கவிதையாய் முளைத்து விடுகின்றன. 

கவர்ந்த காட்சிகளையும் எண்ணங்களையும் அடைந்த அனுபவங்களையும் கதை, கவிதை, கட்டுரைகளாகவும் ஒளிப்படங்களாகவும் என்னுடைய வலைப்பூவான “அமைதிச்சாரல்” தளத்திலும், கவிதைகளுக்கெனத் தனியாக “கவிதை நேரம்” என்றொரு வலைப்பூவும் நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே..

ஏன் கவிதைகள்?.. சமூகம் மற்றும் சம மனிதர்கள் மீதான பார்வைகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் பற்றிப் பகிர்ந்து கொள்ளவும் பேசவும் கவிதை ஒரு வசதியான வடிகால். பக்கம் பக்கமாகப் பன்னிப்பன்னிச் சொல்வதை விட சில வரிகளிலேயே சுருங்கச்சொல்லி விளங்க வைத்து விடவும் முடிகிறதே.

ஒவ்வொரு கவிதையையும் வெளியிடும்போதெல்லாம் வாசித்துப் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய உங்கள் அனைவரின் ஆதரவே இந்நூல் வெளியாவதற்கு முழு முதற்காரணம். உங்கள் அனைவருக்கும் மற்றும் கவிதைகளை வெளியிட்ட மின்னிதழ்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

தனது பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையில் அணிந்துரை அளித்து உற்சாகப்படுத்திய "வல்லமை" மின்னிதழின் நிறுவனர்  திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கல்லூரிக்காலத்தில் கவிதைப்போட்டியொன்றில் பரிசு பெற்ற “விடிய மறுக்கும் இரவுகள்” என்ற எனது கவிதைதான் முதல் விதையாய் விழுந்து எங்கள் தமிழ்ப்பேராசிரியர் திரு. நடராஜன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் வளர ஆரம்பித்து, வலைப்பூவாய்க் கிளை பரப்பினாலும் கணவரும் குழந்தைகளும் கொடுத்த உற்சாகத்தால்தான் இன்று கவிதைத்தொகுப்பாய் மலர்ந்து நிற்கிறது. கணவரை எப்போதோ பெயரில் கூட்டுச் சேர்த்துக்கொண்டாயிற்று, ஆகவே தூண்டுகோலாய் இருக்கும் எனது குழந்தைகள் பாஸ்கர், சுருதி இருவருக்கும் இத்தொகுப்பை சமர்ப்பணம் செய்கிறேன்.

இதற்கு மேல் நான் என்ன சொல்ல?.. என் எழுத்துகள் பேசட்டும்.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை பிரியத்துக்குரிய தோழி மதுமிதா வெளியிட தோழி பரமேசுவரி திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். 

வெளியீட்டு விழாவில்.. எழுத்தாளர்கள் அகநாழிகை பொன் வாசுதேவன், அய்யப்ப மாதவன், மதுமிதா, உஷா, மற்றும் பரமேசுவரி திருநாவுக்கரசு  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பல நல்ல புத்தகங்களைப் புத்தகத்திருவிழாவில் வாங்காமல் விட்டு விட்டவர்களும், தொலைவில் இருப்பதால் வாங்க வாய்ப்பில்லாதவர்களும் ஆன்லைனில் "அகநாழிகை புத்தக உலகத்தில்"  அள்ளிக்கொள்ளலாம். க்ளிக்கும் தூரத்தில்தான் இருக்கிறது அகநாழிகை புத்தக உலகம். நேரடியாகச் சென்று வாங்க விரும்பும் நண்பர்கள் சென்னையிலிருக்கும் கடைக்கு விஜயம் செய்யலாம்.

முகவரி:

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110
aganazhigai@gmail.com

சிறகு விரித்த என் பயணத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.

Sunday, January 19, 2014

உயிர்ப்பித்தல்.. (நவீன விருட்சத்தில் வெளியானது)

விளைநிலங்களிலும்
வளர்ந்து நிற்கும் கான்கிரீட் காடுகளில்
மொட்டைத்த(ரை)லையில்
கொஞ்சம்
பூச்செடிகளுடன் குறுமரங்களையும்
சூடிக்கொண்டிருக்கும்
கட்டிடங்களைக் கண்ணுறும்போது மட்டும்
ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது
எப்பொழுதோ கிரயம் செய்து கொடுத்துவிட்ட
மாந்தோப்பும் மல்லிகைத்தோட்டமும்.

சிந்திச்சிதறிக்கிடக்கும் சூரியச்சில்லறைகளில்
புரண்டெழுந்த அணிற்பிள்ளைகளுடனும்
பொந்துகளை ஆக்கிரமித்திருந்த கிளிகளுடனும்
பகிர்ந்துண்ட தித்திப்பு
இன்னும் ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது அடிநாக்கில்.

“செவ்வகப்பெட்டியினுள் அடைபட்டிருப்பது
என் தோப்புக்கிளியிலொன்றாக இருக்குமோ”
என்றெழும் எண்ணத்தைக் கடந்து செல்ல முயன்று
தோற்றுப் போகும் ஒவ்வொரு முறையும்.
விசும்பியழும் மனதைச் சமாதானப்படுத்த
தொட்டி ரோஜாவும், க்ரோட்டன்ஸுமாய்
வீராவேசத்துடன் உயிர்த்தெழுகிறான்
மனதுள் உறங்கும் விவசாயி.

பி.கு: கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் இதழுக்கு நன்றி.